Friday, September 09, 2011

தமிழர் பண்பாடு

அன்பர்களே,

தமிழர்களிடையே உள்ள ஒற்றுமையைப் பற்றி அன்பர் சுப்ரா நேற்று மாலை குறிப்பிட்டார். அவர்களிடையே ஒற்றுமை சங்க காலத்தில்தான் இருந்திருக்கிறது. தமிழக அரசர்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். கலிங்க நாட்டினர் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அப்போதும்கூட ஒருவருக்குள் ஒருவர் சண்டைபோட்டுக்கொண்டுதான் இருந்தனர். மௌரியர், கலிங்கர், வடுகர், குப்தர் என்று யாராவது வெளியாட்கள் படையெடுத்து வந்தால் ஒன்று சேர்ந்து எதிர்த்து அவர்களை விரட்டியிருக்கின்றனர். ஆனால் பிற்காலத்தில் இந்த ஒற்றுமையெல்லாம் இருந்ததில்லை. கடந்த 1700 ஆண்டுகளாக இந்த ஒற்றுமையெல்லாம் இருக்கவில்லை. தமிழகத்துக்கு வெளியேயுள்ள நாட்டினருடன் அவ்வப்போது தேவைக்கு ஏற்ப சேர்ந்து கொண்டு, எதிரியாக விளங்கிய இன்னொரு தமிழ் மன்னனுடன் போரிட்டனர். இந்த மனப்பான்மையும் வழக்கமும் தமிழ்ச்சமுதாயத்தின் எல்லாத் தட்டுகளிலும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. மாற்றானுக்கு இடம் கொடுத்ததால்தான் 'மாற்றானுக்கு இடம் கொடேல்' என்று நீதிமொழியைப் போதிக்கவேண்டியதாயிற்று. மாற்றானுக்கு இடம் கொடுப்பதில் உள்ள லாபம், இன்னொரு தமிழன் மேலுள்ள வெறுப்பு, விரோதம், பொறாமை, ஆற்றாமை, தனக்குள் இருந்த வீராப்பு, கர்வம், ஆணவம், போட்டா போட்டி, கீழறுப்பு மனப்பான்மை, கொள்கை மாறுபாடு, பேராசை, ஆதிக்கவெறி போன்ற பல விஷயங்கள் தமிழனிடம் இருந்து தமிழனத்தைச் சீரழித்துவிட்டன. இல்லாத ஒற்றுமையைப் பற்றிப் பேசிக்கொண்டு நம்ம ஆட்கள் அதில் ஒரு திருப்தி காணமுயல்கிறார்கள்.

அன்புடன்

ஜெயபாரதி

from agathiyar

No comments:

Post a Comment